துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது அவரது தாயார் துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத் தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.