விலை உயர்வை உடனடியாகக் கைவிட மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச பதற்றமும் விலை உயர்வும்
“ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கும் எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கடுமையான பதற்றமும், கடல் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. ₹1,768.50-க்கு விற்பனையான வணிக சிலிண்டர் விலை ₹2,246.50 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் சிறு குறு உணவகங்கள், தொழிலகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மூடப்படும் நிலை உருவானதுடன், தேநீர் மற்றும் உணவுகளின் விலையும் உயர்ந்தது.”
மீண்டும் உயர்த்தப்பட்ட விலை
“இந்த விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, கடந்த மாதங்களில் முறையே ₹192 மற்றும் ₹153 விலை குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு ₹9.50 விலை உயர்த்தப்பட்டிருப்பது முற்றிலும் மக்கள் நலனுக்கு எதிரானது மற்றும் கண்டனத்திற்குரியது.”
ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை
வணிக நிறுவனங்கள் மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தச் சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், சமையல் எரிவாயுவின் விலையைக் கணிசமாகக் குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ‘ஆவின் வெற்றி’ விருதுகள்: பேரவையில் அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு!
