“பள்ளிகளில் கல்வி அறிவுடன் வயிற்றுப் பசியையும் போக்க வேண்டும்” . “இது ஒரு சாதாரணத் திட்டம் அல்ல; தமிழ்ச் சமூகத்துக்கான சூப்பரான சமூக முதலீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை, சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு பசியில்லாத வயிறும் அவசியம். மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமல்ல, அவர்களது பசியையும் பள்ளிகள் போக்க வேண்டும். இந்த திட்டத்தை நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். இத்திட்டத்தின் மூலம் 3.06 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்” என வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களுடன் இணைந்து உணவருந்திய அனுபவத்தை பகிர்ந்த முதலமைச்சர், “காலையில் குழந்தைகளுடன் உணவருந்தியதும் எனக்கு புதிய எனர்ஜி கிடைத்தது. 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதைவிட வேறு மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது” என்றார்.
காலை உணவு திட்டத்தைச் செலவாகப் பார்க்காமல், சமூகத்துக்கான முதலீடாகக் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “இது ஒரு சாதாரணத் திட்டம் அல்ல; தமிழ்ச் சமூகத்துக்கான சூப்பரான சமூக முதலீடு. மாணவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இத்திட்டமே உண்மையான அடித்தளம்” பள்ளிகளில் வாடிய முகங்களைவிட சுறுசுறுப்பான முகங்களைத்தான் இனி பார்க்கவேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், இந்தத் திட்டம் கல்வியையும் சமூக நீதியையும் ஒன்றிணைக்கும் முக்கிய முயற்சியாக தமிழகத்தில் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். காலை உணவுத் திட்டம் அறிமுகமான பின், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததோடு, அவர்களின் உடல்நலனும் மேம்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கனடா போன்ற முன்னேற்ற நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுகின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், “இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முன்வந்துள்ளன என்பது நம் அரசின் சாதனை. எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான்; உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?


