தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகியுள்ள மழை அளவு, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு நிலைகொண்டுள்ளது, புயலாக எங்கு மாறும், புயலாக மாறியபின் எந்த பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படும்,அதேபோல எந்த பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று விரிவான விளக்கத்தினையும் அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று மாலை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.