2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிர வைக்கின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளவர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 23 பேரைக் கொண்ட இந்த பட்டியல் வெளியானதும், மற்ற கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், கட்சியின் தலைவரான விஜய் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் மார்ச் 27ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்டமாக சுமார் 110 வேட்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பின்னர் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் நேரடியாக வேட்பாளர் நேர்காணல் நடத்தினார். அப்போது சுமார் 117 பேரை சந்தித்து மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, அவர் வெளியூர் பயணங்களில் இருந்ததால் வேட்பாளர் தேர்வு குறித்து பெரிய அளவில் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், தேர்தல் பணிகள் வேகமெடுத்து வரும் சூழலில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு கட்சித் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம், நாம் தமிழர் கட்சி ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் விரைவில் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றன.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு பணிகளை இறுதிக்கட்டத்திற்கு கொண்டு சென்று வருகின்றன. இதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் களம் மேலும் பரபரப்பாக மாறி வருகிறது.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?
