வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது போட்டித் தேர்வு மூலம் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாகவும், 52 துறைகளில் இதுபோல நியமனங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் தங்களுக்கு கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை பறிக்கப்படுவதாகக் கூறி கோபி கண்ணன் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சட்டவிரோத நியமனங்களை நியாயப்படுத்த ஏன் புதுச்சேரி அரசு போராடுகிறது என கேள்வி எழுப்பினார். முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க வேண்டும் எனவும், வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் கொடுத்து, தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? அவர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.
அனைத்து பணி நியமனங்களுக்கும், அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா என கேள்வி எழுப்பினார். மேலும், சட்ட விரோதமாக பணிநியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து புதுவை அரசு உரிய பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.