தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, விடுபட்டுள்ள முக்கிய தொகுப்புகளை ஒருங்கிணைக்கும் பயிலரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மகப்பேறு இறப்பை குறைக்க தாய்மை எண்ணத்துடன் சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பணியாற்றி வருவதாக கூறினார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 54% இருந்த மகப்பேறு மரண விகிதம், தற்போது 44.5% ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் கர்பினி பெண்களுக்கு யோகா பயிற்சி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டில் மகபேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மா.சு. கூறினார்.
தமிழ்நாட்டில் 99.9 % பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் நிலையில் இதில் 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.70 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5.04 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன என்றும் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.
தமிழ்நாட்டில் மகபேறு மரணம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகபேறு மரணம் பூஜியத்தை எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் நிஃபா வைரஸை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் வாயிலாக பயணிப்பவர்களை மருத்துவக்குழு மூலம் கண்காணித்து வருவதாகவும் தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.