மேகதாது அணை கட்ட தமிழகம் இடம் தராது- துரைமுருகன்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் உடன்படாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசினார்.

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. 12.213 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டியது- ஆனால் குறைந்த அளவே கிடைத்துள்ளது. இதேநிலை நீடித்தால் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தண்ணீரை வழங்கும்படி காவிரி மேலாண்மை வாரியத்திடம் வலியுறுத்தும்படி மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். மேகதாது அணை கட்ட எந்த வழியிலும் உடன்பட மாட்டோம்” என்றார்.