நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும் – அமைச்சர் ரகுபதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு ஊழல் பட்டியல் வெளியிட்டாலும் அந்தப் பட்டியல் திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் அளிக்கும் குடும்பத் தலைவிகளிடம் குறைகள் உள்ளதா என்பது குறித்தும் விண்ணப்பம் அளிப்பதில் ஏதும் சிக்கல் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு ஊழல் பட்டியல் என்று வெளியிட்டாலும் அந்தப் பட்டியல் திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது. அரசியல் கட்சிகள் அனைத்தும் நடத்துகின்ற நடைபயணம் போன்று தான் அண்ணாமலை நடை பயணமும். அண்ணாமலை நடை பயணத்தால் எந்த விதமான மாற்றமும் ஏற்படப்போவது கிடையாது. ராகுல்காந்தி நடை பயணத்தில் எழுச்சி இருந்தது. அண்ணாமலை நடைபயணம் குறித்து பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கூட்டத்தை சேர்க்கிறார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம். அண்ணாமலை நடைபயணத்தால் அவருக்கு கால் வலி தான் மிச்சமாகும். வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது, அண்ணாமலை நடைபயணத்தால் எந்த விதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சிறைக்கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக பேசுவதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது” என்றார்.