உலகத் தமிழர்களால் இன்றைய நாள் (தை 2) திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படும் நிலையில், மதுரைக்கு வருகையளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண பெருந்திரளாக மக்கள் கூடி, வீரர்களையும் காளைகளையும் உற்சாகப்படுத்தினர்.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம். வாடிவாசலில் சீறி வரும் காளைகள் வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள் ஆர்வமிக்க பார்வையாளர்கள் என பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமூட்டியது.
உலகில் நிகரற்ற நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளை வீழ்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம். பாலமேட்டில் களம் கண்டுள்ள வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.



