திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன், கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தாா். சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவர் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின அரவது உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கான அனுமதி கடிதத்துடன் ராஜேந்திரனின் உடலை பெற்று செல்வதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, பிரேத பரிசோதனைக்கு முன்பாக உறவினர்கள் காட்டப்பட்ட உடல், ராஜேந்திரனுடையது இல்லை என்பது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சிடைந்தனர், ராஜேந்திரன் உடல் எங்கே என்று கேட்டு மருத்துவமனையின் அமரர் அறையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மருத்துவமனை அதிகாரிகள் அமரர் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், “எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை எல்லை சாலைத் திட்டப் பணியில், வெங்கல் அருகே விஷ்ணுவாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த பிஹாரை சேர்ந்த மனோஜ்மஞ்சூர் (55) என்ற ஒப்பந்த தொழிலாளி கடந்த 2-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கு பதில், தவறுதலாக ராஜேந்திரனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜேந்திரனின் உடல் பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது” தெரியவந்தது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவமனை நிர்வாகம் பிஹாருக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததுடன், உடலை திருப்பி கொண்டு வரும்படி தெரிவித்துள்ளனர். ஆகவே, முதியவர் ராஜேந்திரன் உடல் வந்துவிடும் என, அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து , இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் நேற்று அந்த விவசாயின் உடல் திருவள்ளூர் கொண்டு வரப்பட்டது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் கிருஷ்ணா ஸ்ரீ திருவண்ணாமலை மருத்துவமனைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.