கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்து மதத்தில் இருந்து வேறு மதம் மாறியவர்கள் பட்டியலின சாதிகளில் இணைய முடியாது. ஆனால், சீக்கியம் மற்றும் பவுத்த மதம் மாறியவர்களை பட்டியலின சாதிப்பட்டியலில் சேர்த்து முறையே 1956, 1990 ஆண்டுகளில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது, இதே போன்ற திருத்தம்தான் கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன, இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

பட்டியலின இட ஒதுக்கீடு உரிமைக்ளை சீக்கியம், பெளத்த மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு வழங்கியதுபோல கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கு வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பேரவையிலிருந்து வெளியேறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக கிறிஸ்தவ ஆதி திராவிடர் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.
பாஜக வெளிநடப்பு செய்ததன் மூலம் நாங்கள் சரியான தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறோம் என்பது தெரிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாஜக வெளிநடப்பு செய்த நிலையில், பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.