கோடநாடு கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக தான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக தனபால் பேசி வருவதாக குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 26ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் – 10க்குள்( இன்றைக்குள்) பதிலளிக்க தனபாலுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோடநாடு கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைக்கால தடை என்பதை , நிரந்தர தடை உத்தரவு என மாற்றி வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.