வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலப்பதிகாரம் வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.
பள்ளியில் மாணவர்கள் சார்பாக நாட்டுப்புற நடன நிகழ்ச்சியும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கும்மியடித்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் துணைவியார் கலந்துகொண்டு ஆசிரியருடன் கும்மி நடனம் ஆடினார். பண்டைய கால பொருட்கள் மற்றும் பாரம்பரிய நெற்பயிர்கள் மாணவர்களால் அங்கு காட்சிப்படுத்தப்பட்டதை மாவட்ட ஆட்சியர் கண்டுகளித்தார். முன்னதாக பூம்புகார் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய இசை நிகழ்ச்சி, சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் சுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.