ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், 2.ம் நாள் வேட்பு மனு தாக்கலில் ஓரிரு சுயேட்சைகள் மனுதாக்கல் செய்து வருவதால், தேர்தல் அலுவலகம் பரபரப்பின்றி காட்சி அளிக்கிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து இரண்டாம் நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி மூன்று மணி வரை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மனிஷ் வேட்பு மனுக்களை பெறுகிறார். கடந்த பத்தாம் தேதி, முதல் நாளில் மூன்று சுயேட்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 17ஆம் தேதி மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஓரிரு சுயேட்சைகள் மட்டுமே வந்துள்ளனர். சேலம் தாதகாபட்டியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஈரோடு 46 புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சுயேட்சைகளாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே முதல் நாளில் மனு தாக்கல் செய்த கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர்முகமது, இரண்டாவதாக மேலும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் சில சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கான படிவங்களை பெற்று சென்றுள்ளனர்.
வேட்பு மனு தாக்கலையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டதை சரிபார்க்க 5 மேஜைகளில் 10.க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் சுயேட்சைகளும் ஆர்வம் காட்டாததால் வேட்பு மனு தாக்கல் மந்தநிலையில் உள்ளது. கடந்த 2023.ல் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் 70.க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்