நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.நகை கடனுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் சிரமங்களை சந்திக்க உள்ளனர் என விதிகளுக்கு எதிராக திமுக, சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சி தரப்பினர் மற்றும் பல தரப்பினர் போர்க்கொடி தூக்கி இருந்தனர். நகை கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: ”விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையிலும், தங்கத்தை அடமானமாக பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகின்றது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் ,பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிப்படையக்கூடும்.
அதனால். தமிழகத்திலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு இந்த நெறிமுறைகளின் மூலம் கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லாததால், அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான வழியாக நகைக்கடன் உள்ளது.
தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைப்பதுடன், கடன் வாங்கும் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதையும் குறைத்துவிடும். நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நாடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.
இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, நகைக்கடனுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை அடமானமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, விவசாய சமூகத்துக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் தாங்கள் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
“ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.