தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல் விளக்குகளின் விற்பனை சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை தொடங்குகிறது. தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலைகோவிலில் நாளை காலை பரணி தீபமும், மாலையில் திருவண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை முதலே இல்லங்கள் தோறும் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது வழக்கம். இதன் காரணமாக சேலத்தில் குமாரசாமி பட்டியில் 50-க்கும் மேற்பட்ட மண் விளக்கு விற்பனை கடைகளில், பெண்கள் தங்கள் இல்லங்களுக்கு தேவையான அகல் விளக்குகளை வாங்கிச் சென்றனர்.
அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான அகல்விளக்கு, லட்சுமி விளக்கு, குபேர விளக்கு, விநாயகர் விளக்கு, பஞ்சமுக விளக்கு, சங்கிலி விளக்கு என பல்வேறு வடிவமைப்புகளில் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவைகளை ஏராளமான பெண்கள் தங்கள் இல்லங்களில் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்க வாங்கி சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் கூறும் போது, கார்த்திகை திருநாளில் வீடுகளில் விளக்கேற்றினால் நன்மை பெருகிடும். அந்த வகையில் பல்வேறு வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை தொடங்கி மூன்று நாட்களுக்கு வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்போம் என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.


