
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து முதலுதவி செய்த சிறை மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனையடுத்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சு விடுவதில் இருந்த சிரமமும் தற்போது சரியாகியுள்ளது. தொடர்ந்து அவருக்கு உடல்நலம் சரியானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


