2026 சட்டமன்ற தேர்தலில் 2 முனைப் போட்டிதான். அது திமுக – தவெக இடையே தான். விஜயின் வருகையால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தோல்வியை தழுவும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளாா்.
இன்று காலை சென்னை நகரில் அ.ம.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக தலைவர்களிடம் பலமுறை கூறியுள்ளேன். இதை எழுதியே கொடுத்தும் இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளாா். மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், அப்போது ஜானகி அணியிலும் ஜெயலலிதா அணியிலும் பிரிவுகள் ஏற்பட்டன. பின்னர் ஜெயலலிதா, எதிர்த்தவர்களையே அரவணைத்து கொண்டு ஆட்சியை அமைத்தார். ஓ.பன்னீர்செல்வம், ஆர்.எம்.வீரப்பன், பா.வளர்மதி போன்றோர் ஒருகாலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தவர்கள் தான். ஆனால் பின்னர் அவர்களை இணைத்துக் கொண்டார்.
அதேபோன்று நான் இணைய விரும்புகிறேன் என நினைக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமி உடன் ஒருபோதும் இணைய மாட்டேன். அவரின் தலைமையிலான கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தான் நிற்கும் என கூறியுள்ளாா். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அதற்கு விஜய் தலைமையில் தவெக கூட்டணி சரியாக அமைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு சற்றும் தகுதியற்றவர். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதற்கு இவர் மீதான அதிருப்தியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளாா். எங்களுடன் சில கட்சிகள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதைப் பற்றி இப்போது சொல்ல நாகரிகமல்ல. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். புதிய மாற்றங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் ஒரு விஷயம் உறுதி, அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணி ஆகும் என்றாா்.

எங்களை தவிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது. இது யதார்த்த நிலைமை. துரோக சக்தியான எடப்பாடி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் உறுதியாக வீழ்த்தப்படும். அவரால் துரோகம் செய்யப்பட்டாலும், மற்ற யாரிடமும் எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை என்று தெரிவித்துள்ளாா். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்தாா். இனி எந்த அரசியல் தலைவருக்கும் துரோகம் என்ற சிந்தனையுடன் நடக்கக்கூடாது என்பதற்காக தான் அ.ம.மு.க உறுதியுடன் செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வீழ்த்தப்பட்ட பின், புரட்சி தலைவர் ஜெயலலிதா வகுத்த சட்ட திட்டங்களின் படி அ.தி.மு.க மறுமலர்ச்சி பெறுவதற்கு அ.ம.மு.க உரிய நடவடிக்கை எடுக்கும், என அ.ம.மு.க பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சிபிசிஐடிக்கு மாறுகிறதா மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு.?? போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்..!!


