தமிழக சட்டமன்றத்தில் மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை திரும்ப பெறுவதே நிரந்தர தீர்வாகும். கச்சத்தீவை மீட்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளாா்.
மேலும் இது குறித்து சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது, ” கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு நிரந்தர தீர்வாக அமையும். இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழ் நாட்டு மீனவர்களின் மீது தாக்குதல் சம்பவம் தொடர்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும். முன்னால் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கச்சத்தீவு மீட்பது தொடர்பாக ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. நான் முதல்வரான பின் பிரதமர் முதல்முதலாக தமிழ்நாடு வந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் கச்சத்தீவை, மாநில அரசுதான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.