மயிலாடுதுறையில் மது குடித்து இருவர் பலி! விசாரணையில் பகீர் தகவல்
தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையிலும் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை அருந்தியதால் பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இருவரும் மதுவில் சயனைடு கலந்து குடித்ததாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கம் அளித்துள்ளார். கெமிக்கல் பரிசோதனை செய்ததில் மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துவிடும், அதன்பின் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது? பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.
!["தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/05/annamalai43434-1-300x188.jpg)
உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.