தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூன் இரண்டாவது வாரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 நடைபெற்று முடிந்தது. 7 கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் தற்போது 4 கட்டத் தேர்தல் வரை முடிந்துவிட்டது. 7 வது கட்டத் தேர்தல் ஜூன் 1 முடிந்து ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் மத்தியில் இந்திய கூட்டணி தலைமையில் ஆட்சி அமைத்தால் அதில் திமுக முக்கிய இடம் வகிக்கும்.
அதன் பின்னர் தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைமை கழக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலையத்தில் உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும்போது இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவரிடம் பேசும்போது, 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து திமுக கட்சியிலும், ஆட்சியிலும் சில மாற்றங்களை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.
அப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி இன்னும் தொடங்கவே இல்லை என்பதை ஒற்றை செங்கல்லை மக்களிடம் கொண்டு சென்ற உதயநிதியின் பிரச்சார வியூகத்தை பாராட்டதவர்களே இருக்க முடியாது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு அவருடைய பிரச்சாரம் முக்கிய காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உதயநிதியின் பிரச்சாரம் பாராட்டும்படியாக இருந்தது.
திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்துவரும் உதயநிதி கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முடிவு செய்து இருப்பதாக அந்த திமுக பிரமுகர் தெரிவித்தார்.
ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா, காந்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் பொறுப்புகளும் இடம்மாற வாய்ப்பு இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.
மேலும் அமைச்சரவையில் இருப்பவர்களை நீக்குவதற்கோ அல்லது புதிய நபரை அமைச்சராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவோ தகவல் எதுவும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத அந்த முக்கிய பிரமுகர் தெரிவித்துள்ளார் .