தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட தற்போதைய அரசால் செயல்படுத்த முடியவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ”முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 3 திட்டங்களில் முதன்மைத் திட்டமான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யைத் தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்புதான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மை என்றால், தமிழ்நாட்டில் குதிரை பேர அரசு எதற்கு?”
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இத்திட்டம் மே 27 அன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி, அரசு இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், புதிய டிஜிபி நியமன விவகாரங்களை முன்னிறுத்தி அரசு முடங்கியுள்ளதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், ஆட்சி அமைப்பதற்காக நடைபெற்றதாகக் கூறப்படும் அரசியல் நகர்வுகளை ‘குதிரை பேர அரசு’ என அவர் சாடியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தொகுதி பங்கீட்டில் முறைகேடு? தலைமைக்கு ஜோதிமணி எம்.பி. சரமாரி கேள்வி!
