கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்? ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்?

திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா? நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்“ என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்


