கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருந்த நிலையில் கவிதா சிவாவை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். மேலும் கவிதா மீது கடந்த 2016 ல் பேருந்தில் பயணம் செய்த தெய்வசந்திரா என்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்ததாக, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோவை 1 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக கடந்த மாதம் 23 ஆம் தேதி கவிதா நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த கவிதாவின் முதல் கணவர் சிவா, திடிரென தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றியுள்ளார். இதில் கவிதா முகம் மற்றும் உடலில் கடுமையான காயம் ஏற்பட்டது.
80 சதவீத காயங்களுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கவிதா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.