
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ் மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து வரக்கூடிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்கள் தமிழக கடற்கரையை நோக்கிய நகரக்கூடும் எனவும், நாளை புயலாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கையை ஒட்டி நகரும் எனவும், இன்று இரவு வட இலங்கை மற்றும் அதனை ஒட்டிய டெல்டா கடற்கரை அருகே ஒரே இடத்தில் மையம் கொள்ள இருக்கிறது. ஏற்கனவே இன்று காலை முதல் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை தொடங்கியிருக்கும் நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு மேலும் தமிழகத்தில் மழையை தீவிர படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இன்று மாலை முதல் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.26) மாலை முதல் நவ. 28ஆம் தேதி வரை தீவிர மழை பொழிவுக்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் விட்டு விட்டு கனமழையாக நீடிக்கும் எனவும், பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நவ.28ஆம் தேதி வரை இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக நகர்ந்து டெல்டா மாவட்ட கடற்கரை ஓரங்களில மையம் கொள்ளும் எனவும், அதன்பிறகே நிலப்பரப்பை நோக்கி உள்ளதாலும், டிச. 1ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நவம்பர் 26, 27) இன்றும் நாளையும் மற்றும் நவ.29, 30 ஆகிய தேதிகளில் இந்த கனமழை மிக தீவிரமாக இருக்கும் எனவும், இடையில் 28ஆம் தேதி மற்றும் இந்த கனமழையின் தீவிரம் சற்று குறையும் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாலும், கடல் சார்ந்த அலைவுகள் மற்றும் கடல் வெப்பநிலை 29 – 30 டிகிரி என சாதகமான சூழல் இருப்பதாலும் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதற்காக தெரிவிக்கப்பட்டது. அதன்படியே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயலாக மாறினாலும் இது வட கடலோர மாவட்டங்களில் தான் கரையை கடக்கும் எனவும், புயல் காற்று இருக்காது என்பதால் பெரிதாக பாதிப்பு இருக்காது எனவும், அதிக மழை கொடுக்கும் ஒரு புயலாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.