“தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட தடை செய்வது ஏற்புடையதல்ல, சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.நடிகர் கமலஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்ட ஒரு நடிப்பில் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தக் லைஃப். இத்திரைப்படத்தின் பிரமோஷன் விழா மே 30-ம் தேதி சென்னையில் நடைபெற்றபோது, தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என கமலஹாசன் பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் திரையிட கூடாது திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. மேலும் திரைப்படம் திரையிட்டால் திரையரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படும் என கன்னட அமைப்புகள் சிலவும் எச்சரித்தனர். இதனால் கர்நாடகாவில் மட்டும் இத்திரைப்படம் திரையிடவில்லை.
இந்நிலையில் தக் லைஃப் திரைப்பட தடை உத்தரவுக்கு எதிராக மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்ற தேர்வு விசாரணைக்கு வந்த போது கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தனர். இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வு, குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் நம்முடைய அரசியலமைப்பு விதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது எனவும், எவர் ஒருவரும் தனது திரைப்படத்தை வெளியிட உரிமை உண்டு அதே நேரத்தில் மக்கள் அத்திரைப்படத்தை பார்த்து முடிவு செய்யட்டும் என கருத்து தெரிவித்தார்.
மேலும் திரைப்படத்தை திரையிடுவதை தடை செய்ய முடியாது என்றும் எனவே தொடர்பாக கர்நாடக அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியதோடு, இவ்விவகாரத்தில் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பு ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரம் மக்களின் உணர்வு பூர்வமான விஷயம் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதற்கு நீதிபதிகள், ஒரு திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்று இருந்தால், அதனை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையிடுவதற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியதோடு , சட்டத்தின்படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார்போல் நடக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும் தக் லைப்” திரைப்படத்தை திரையிடும் விவகாரம், பாதுகாப்பு விவகாரம் தெடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு தனது கருத்தை, நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். சிலர் அச்சுறுத்துவதால் ஒரு திரைப்படம் வெளியிடப்படாமல் இருப்பது ஏற்க முடியாது என்றும், திரைப்படத்தை வெளியிட CBFC சான்றிதழ் பெற்ற பின்னர் படத்தை திரையிடக்கூடாது என தடுக்க முடியாது எனவும், படம் வெளியான பிறகு பொதுமக்கள் படத்தை பார்க்காமல் கூட இருக்கலாம், ஆனால் அதற்காக படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.