கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் காலணி உற்பத்தி நிறுவனத்தில் (ஷூ கம்பெனி) நடைபெற்ற ஆள் சேர்ப்பு முகாமில், வெறும் 52 காலிப் பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரண்ட சம்பவம், வேலைவாய்ப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் செயல்படும் காலணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தற்காலிக மற்றும் நிரந்தரப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான நேரடி நேர்காணல் முகாமை இன்று (நவம்பர் 21, 2025) நடத்தியது.

சுமார் 52 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த முகாம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைக் கேட்டு, கிருஷ்ணகிரி மட்டுமின்றி தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் குவிந்தனர்.

பலர் அதிகாலையிலேயே நீண்ட தூரம் பயணித்து, வேலைவாய்ப்பு முகாமுக்கு வந்து சேர்ந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால், சிப்காட் வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. வேலை தேடி வந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வரிசையாக நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கம்பெனியின் நுழைவாயிலில் முண்டியடித்துக்கொண்டு நின்றவர்களை ஒழுங்குபடுத்த, போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்காகப் படித்த இளைஞர்கள் அதிக அளவில் திரண்டது, கிராமப்புறங்களில் நிலவும் கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், குறைந்தபட்சம் இந்தப் பணியாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். “படிப்பை முடித்துவிட்டு நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறோம். நிரந்தர வேலை கிடைக்காவிட்டாலும், தற்காலிக வேலைக்காகவாவது முயற்சி செய்யலாம் என்ற நம்பிக்கையில் வந்தோம்” என நேர்காணலுக்கு வந்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
குறைவான பணியிடங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் திரண்டது, தமிழகத்தில் வேலைவாய்ப்பின் தேவையை உணர்த்தும் ஒரு கண்ணாடியாக அமைந்துள்ளது.


