சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1,000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.
இது குறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கல்வி தொடர்பான பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான சூழல் உருவாகியிருப்பதை பார்க்கும் போது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது பச்சிளம் குழந்தையில் தொடங்கி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என கடந்த சில நாட்களில் அன்றாடம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து, இதுவரை இல்லாத நடைமுறையாக கோடை கால சிறப்பு உதவித் தொகை வழங்கி பெண்களை ஏமாற்றிவிட்டால், இதுபோன்று தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சகித்துக் கொண்டு மீண்டும் தங்களுக்கே வாக்களிப்பாளர்கள் என்ற திமுகவின் தீய எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் துளியளவும் இடமளிக்காத வகையில் தமிழக மகளிர் அனைவரும் வரும் தேர்தலில் மௌனப் புரட்சியை ஏற்படுத்தப் போவது உறுதி.

எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மகளிர் அனைவரும் ஒன்றிணைந்து, பெண்கள் பாதுகாப்பில் துளியளவும் அக்கறையின்றி, முழு நாளும் விளம்பர மோகத்திலேயே மூழ்கிக் கிடக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதும் நிச்சயம்” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.
