மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கே.கணேசன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் அ.ஆபிதம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கே.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்ற மகளிர்களுக்கு உணவருந்தும் அறை, உடை மாற்றும் அறை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை தனியாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், செவிலியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஆய்வக உடனாளர்கள், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மகளிர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்.

முதல்வர் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழக அரசியல் பணி அமர்த்தப்படும் மகளிர்களை தனியார் மயம் ஒப்படைக்காமல் அரசு பணியாளர்களாக அல்லது தினக்கூலி பணியாளர்களாக நியமனம் செய்திட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசு பணிகளில் மகளிர்களுக்கு 50 சதவீதம் பணியிடம் வழங்க வேண்டும்” என கூறினார்.
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
