ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த ஒரு குழு உறுப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்பு போர் தொடங்கிய பிறகு, அமெரிக்க விமானம் ஒன்று வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானை நாங்கள் முழுமையாக முறியடித்துவிட்டோம், இந்த வேலையை மிக விரைவாக முடிப்போம்” என்று தேசிய அளவில் உரையாற்றிய இரண்டு நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அமெரிக்க இராணுவம் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது இந்த மீட்பு நிகழ்ந்ததாகத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் பலர் தேடுதல் பணி நடைபெற்றதை உறுதிப்படுத்தினர்.

விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் மற்றும் மற்றவர்களின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விமானம் வீழ்ந்ததற்கான சரியான சூழல் முதலில் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அசோசியேட்டட் பிரஸ் (AP) பெற்ற பென்டகனின் மின்னஞ்சல் ஒன்றில், “மேற்கு ஆசியாவில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக” அமெரிக்க இராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வந்த போதிலும், ஈரான் தொடர்ந்து மேற்கு ஆசியா முழுவதும் இலக்குகளைத் தாக்கி வருகிறது. குறிப்பாக, எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மீதான ஈரானின் பிடி, உலகளாவிய எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்துள்ளது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவின் F-15E Strike Eagle வகை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பொதுவாக ஒரு விமானி (Pilot) மற்றும் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரி (Weapons System Officer) என இருவர் இருப்பார்கள்.
ஈரானியத் தொலைக்காட்சிகள், “விமானத்திலிருந்து குதித்த வீரரை மக்கள் தேட வேண்டும்” என்று முதன்முறையாக பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், மலைப்பாங்கான பகுதிகளில் அமெரிக்க ட்ரோன்களும் ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது தெரிகிறது. குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் (Desalination Plant) மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன; சவுதி அரேபியா பல ஈரானிய ட்ரோன்களை அழித்ததாகக் கூறியுள்ளது; ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததால் ஒரு எரிவாயு வயல் மூடப்பட்டது. பெய்ரூட் அருகே இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் இதுவரை ஈரானில் 1,900-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உலக நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமை விவாதிக்க உள்ளது.
இதற்கிடையில், அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “இன்னும் சிறிது காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை எங்களால் எளிதாகத் திறக்க முடியும், எண்ணெயைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது கச்சா எண்ணெய் விலை போர் தொடங்கியதிலிருந்து 50% உயர்ந்து, ஒரு பேரல் ரூ.109 ஆக உள்ளது.
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
