நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று வழங்குமாறு சம்பந்தப்பட்ட தாசில்தாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜாதி மற்றும் மதம் குறிப்பிடாத சான்றிதழ் வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தாசில்தாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மனுவில், 1958ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்ததாக தெரிவித்த பார்த்திபன், தன்னிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றும், எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின்னரும் கல்விச் சான்றுகளை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், தனது ஜாதி மற்றும் மதத்தை நிரூபிக்கும் எந்த ஆவணமும் தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாடுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதால், அதற்கு எதிராக ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென ஜாதி-மதமற்றவர் என சான்றிதழ் கோரி வேளச்சேரி தாசில்தாரரிடம் விண்ணப்பித்ததாகவும், பின்னர் அந்த விண்ணப்பம் சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு மாற்றப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்ததால், குறிப்பிட்ட காலக்கெடுவில் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சோழிங்கநல்லூர் தாசில்தாரர் ஒரு வாரத்திற்குள் ஜாதி-மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
