ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டன” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்துவது குறித்து அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவ அணி நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக வெளியான தகவல்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு பொறுப்பில் இல்லாத கட்சியினர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துகிறார்கள் என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன், “மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு துறைகளில் ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வு மேற்கொள்வதற்கு நிர்வாக அமைப்புகள் இருக்கும்போது, கட்சியினருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், “ஆளுங்கட்சி என்ற மமதையில் சில தவெக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதும் ஏற்க முடியாதது” என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் “யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்த ஜோசப் விஜய், தனது கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் தற்போது படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்” எனவும் தினகரன் விமர்சித்துள்ளார். ஆளுங்கட்சியினர் மற்றும் ரசிகர்கள் பெயரில் Insta Reels மற்றும் விளம்பர வீடியோக்கள் எடுப்பதற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“விளம்பரம் என்பது வேறு, மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சர் தனது கட்சியினருக்கு உணர்த்த வேண்டும். அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்” என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
