காட்டுப் பகுதியில் வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வனத்துறை உயர் அதிகாரியே விதிகளை மீறி சாம்பர் மானுக்கு அவல் மற்றும் தின்பண்டங்களை ஊட்டிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில், போரி சரகத்தின் பொறுப்பு கண்காணிப்பாளராகவும், இதார்சி (Itarsi) பொறுப்பு உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்த வினோத் வர்மா, காட்டில் சுற்றித்திரிந்த அரிய வகை சாம்பர் மானுக்கு அவல் (Poha) மற்றும் தின்பண்டங்களை கையால் ஊட்டியதுடன், அதை அன்பாகத் தடவிக்கொடுத்தார். இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ வேகமாக வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பு விதிகளை மீறியதாக வினோத் வர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்று வனத்துறை அதிகாரிகள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர். மனிதர்கள் வழங்கும் உணவுக்கு பழகிவிடும் காட்டு விலங்குகள், பின்னர் உணவைத் தேடி கிராமங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையத் தொடங்கும். இதனால் மனித–விலங்கு மோதல்கள் அதிகரிப்பதோடு, சாலை விபத்துகள், நோய் பரவல், வேட்டையாடப்படும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளும் உருவாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
வனவிலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்விடத்தில், இயற்கையான முறையிலேயே வாழ அனுமதிப்பதே பாதுகாப்பின் அடிப்படை நோக்கம் என்பதால், விதிகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரியே அவற்றை மீறிய சம்பவம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
