விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ‘குருலட்சுமி’ என்ற பட்டாசு ஆலையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் ஆலைக்குள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துச் சிதறி வருகின்றன. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டமாகக் காணப்படுகிறது.


பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் உள்ளே நுழைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மேலும் பல விபரங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
