வருமானம் வரி வரம்புக்குள் இல்லையென்றாலும், சிலருக்கு ஐடிஆர் (Income Tax Return) தாக்கல் செய்வது கட்டாயமாக இருக்கலாம். அது குறித்த முக்கிய நிபந்தனைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
வருமான வரி என்பது, ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் ஆண்டு வரி ஆகும். உங்கள் சம்பளம், தொழில் லாபம், வீட்டு வாடகை, வங்கி வட்டி, சொத்து விற்பனை லாபம் என அனைத்து வருமானத்தின் ஒரு பகுதியை சட்டப்படி அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். அரசு கணக்குப்படி, ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி இல்லை. ஆனால், சில சமயங்களில் 4 லட்சத்துக்கும் குறைவான வருமானம் இருந்தாலும், சில நிபந்தனைகளின் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமாகிறது.

ஐடிஆர் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் முக்கிய நிபந்தனைகள்
- வங்கி பரிவர்த்தனைகள்: இந்திய வருமான வரிச் சட்டப்படி, உங்கள் வருமானத்துக்கு வரி விலக்கு இருந்தாலும், நடப்புக் கணக்கில் (Current Account) ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தாலோ, அல்லது சேமிப்புக் கணக்கில் (Savings Account) 50 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலோ ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம்.
- வெளிநாட்டுப் பயணம்: ஒரு இந்தியக் குடிமகன் வெளிநாட்டுப் பயணத்துக்காக ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், அவர் கண்டிப்பாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- மின்சாரக் கட்டணம்: ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் மின்சாரக் கட்டணம் (Electricity Bill) செலுத்தினாலும் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம் என அரசு கூறுகிறது.
குறைந்த வருமானம் இருந்தாலும் ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
குறைந்த வருமானம் இருந்தாலும் சில காரணங்களுக்காக ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகிறது.
- TDS ரீஃபண்ட்: உங்கள் வருமானத்தில் பிடித்தம் செய்யப்பட்ட TDS (Tax Deducted at Source) தொகையை அரசிடமிருந்து திரும்பப் பெற ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
- தொழில் நஷ்டம்: வணிகத்தில் ஏற்படும் நஷ்டங்களை (Business Losses) அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு சென்று கணக்குக் காட்ட இது உதவுகிறது.
- ஆவணச் சான்று: உங்கள் அதிகாரப்பூர்வ வருமானத்தை நிரூபிக்கவும், அரசு ஆவணங்களைப் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.
ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அபராதம்
வருமான வரிச் சட்டத்தின்படி, வரி வரம்பிற்குள் இருந்து அல்லது மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் கீழ் வந்தும் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
அபராத விவரம்: வருமான வரிச் சட்டப் பிரிவு 234F-ன் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். எனினும், மொத்த வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள்ளாக இருந்தால், இந்த அபராதத் தொகை 1,000 ரூபாயாகக் குறைக்கப்படும்.
- நிதிச் சிக்கல்கள்: TDS ரீஃபண்ட் பெறுவதிலும், தொழில் நஷ்டங்களை ஈடு செய்து வரிச் சலுகை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.
- இதர பாதிப்புகள்: எதிர்காலத்தில் நீங்கள் வீட்டுக்கடன் (Home Loan), கல்விக்கடன் (Education Loan) போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போதும், வெளிநாடு செல்வதற்கான விசா (Visa) விண்ணப்பங்களின் போதும் கடுமையான பிரச்சனைகள் அல்லது நிராகரிப்புகள் வர வாய்ப்புள்ளது. எனவே, வருமானம் குறைவாக இருந்தாலும் தகுந்த நிபந்தனைகளின் கீழ் வருபவர்கள் தங்களின் ஐடிஆர்-ஐ உரிய நேரத்தில் தாக்கல் செய்வது நல்லது.
“இதுதான் விஜய் சொன்ன தூய சக்தி அரசியலா?” – த.வெ.க. அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

