அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே இருக்கும் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 16 பேரும் புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் ,மரக்காணம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர் .
விவகாரம் பெரிதானதை அடுத்து அந்த சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் மூன்று பேரின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . கள்ளச்சாராய விற்பனை ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
’’மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும் ,மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.
மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தனது இரங்கலில் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே நேரம், ‘’கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது’’ என்று ஆவேசப்படும் எடப்பாடி,
’’இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.