இனி டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்
டாஸ்மாக் கடை திறப்பு நேரங்களிலும், விற்பனையிலும் விதிமீறல்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வாணிபக் கழகத்தின் மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று கலந்துரையாடினார்.

பின்னர் கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு கண்டிப்பாக மூடிவிடவேண்டும் என அறிவுறுத்தினார். டாஸ்மாக், மதுக்கூடங்கள் திறப்பில் எந்தவித விதிமீறல்கள் கூடாது எனவும், கூடுதல் நேரம் கடைகள் திறந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை ஊழியரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.

சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும்,
கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். இறுதியாக டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார். வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டருக்குள் உள்ள கடைகளை கணக்கெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


