தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை- அண்ணாமலை
தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இருக்கும் கர்நாடகா, கேரளா அரசுகளை கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசாமல் இருக்கக் கூடாது. கர்நாடக துணை முதலமைச்சரை கண்டித்து ஏன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடவில்லை. அரசியல் லாபத்திற்காக தமிழகத்தின் நலனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடமானம் வைத்துவிட்டார்.

தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும். பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம்.ஒரு நாட்டில் இரு வேறு சட்டங்கள் இருந்தால் ஒற்றுமை இருக்காது என அம்பேத்கர் கூறியிருந்தார். பொது சிவில் சட்டம் குறித்து அதிமுகவுக்கு புரிதல் இல்லை, அதனை புரிந்து கொண்டு மாறுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.