கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது தினசரி 40,000 ஆவின் மோர் பாட்டில்கள் விற்பனையாகிறது என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், தயிர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்களை விற்பனை செய்துவருகிறது.
தற்போது கோடைகால வெயில் அதிகரித்துள்ளதால் தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.
அதிலும், ஆவின் மோர் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. 200 மில்லி ஆவின் மோர் பாட்டில் ரூ.12-க்கும், 200 மில்லி ஆவின் மோர் பாக்கெட் ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ஆவின் மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தினசரி 40,000-ம் ஆவின் மோர் பாட்டில்களும், 18,000-ம் ஆவின் மோர் பாக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதைப்போன்று பாக்கெட் மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 10000- பாக்கெட் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினசரி 18000 பாக்கெட் விற்பனையாகியுள்ளது.
விற்பனை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப ஆவின் மோர் பாட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நடவடிக்கை எடுத்து வருகிறது.