அதிமுகவிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பாஜக பெற்று, அவற்றில் 60 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதிமுக 134 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமபாதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 60 இடங்கள் வரை உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த தொகுதிகளின் விவரம், போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் அடங்கிய உத்தேச பட்டியலை அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் வழங்கியிருக்கிறார். அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அது உறுதிசெய்யப்படவில்லை. காரணம் அவர்களுக்கு முதல்வழி தோல்வியாகி விட்டது. இரண்டாவது வழியான வாக்கு திருட்டு, தேர்தல் ஆணையம் போன்றவற்றை வைத்துதான் வெற்றி பெற திட்டமிட்டிருக்கிறார்கள்.
காரணம் கூட்டணி விவகாரத்தில் அவர்கள் நினைத்தது எதுவும் இதுவரை நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பல காய்களை நகர்த்தி, பாஜகவை நிம்மதி இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், நயினாருக்கு பணத்தை கொடுத்து தான் சொல்கிறபடி டெல்லியில் சென்று சொல்லும்படி கூறியுள்ளார். அவர் பில்டப் கொடுப்பதற்காக 60 இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திகள் இன்றைக்கு வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளில் 100 தொகுதிகளை பாஜக எடுத்துக்கொள்ளும். அதில் 60 தொகுதிகளை வைத்துக்கொண்டு மற்றவற்றை ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு வழங்குவார்கள். தாங்கள் போட்டியிடும் 60 இடங்களில் 35 முதல் 40 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுவிட்டு, அதிமுக 70 இடங்களில் வென்றால், விஜயுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பதுதான் பாஜவின் திட்டமாகும். இதற்காக தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள். எஸ்ஐஆரில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள்.
அடுத்தக்கட்டமாக மோடியை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து பொங்கல் கொண்டாடுவது என்று திட்டமிட்டிருக்கிறார்கள். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள எல்.முருகன் வீட்டில் மோடியை அழைத்து வந்து பொங்கல் வைத்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு நடந்த பொங்கலுக்கு செல்லவில்லை. தற்போது மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக வருகிறார்கள். அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் கலவரம். இவற்றை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

1989 எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக அழிந்து போயிருக்கும். ராஜிவ் காந்தி மரணமும், அதை தொடர்ந்து பரப்பப்பட்ட வதந்திகளும் தான் அதிமுகவை மீண்டும் கட்டமைக்க காரணமாக அமைந்தது. 1989 தேர்தலுக்கு பிறகு மாபெரும் மாற்றம் வரப் போகிற தேர்தல் என்றால், எதிர்வரும் 2026 தேர்தல் தான். இந்த தேர்தலில் அதிமுக மீண்டும் சுக்கு நூறாக உடையப் போகிறது. அதற்கு காரணம் அதிமுகவில் மக்களை ஈர்க்கும் தலைமை கிடையாது.
அதை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு 2031ல் ஆட்சியை பிடிப்பதற்கான அடிப்படை வேலைகளை அதிமுக செய்து கொண்டிருக்கிறது. விஜய்க்கும் பணம் கொடுத்து வாக்குகளை உடைத்து, தேர்தலுக்கு பிறகு அவருடன் கூட்டணியில் சேர்த்து ஆட்சியை பிடிப்பார்கள். முடியாவிட்டால் 2031ல்தான். திமுக தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பெரிய நெருக்கடி கொடுப்பார்கள். அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஏதேனும் விபரீதம் நடந்தால் ஒழிய இவர்களை வீழ்த்துவது முடியாத காரியமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


