2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 30 இடங்களுக்கு மேல் தரப்படாது. அதனை பாஜக ஏற்க மறுத்தால் எடப்பாடி கூட்டணியில் இருந்து விலகி விடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 50 இடங்கள் கேட்பது தொடர்பாகவும், திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு கூடுதல் இடங்கள் கேட்பது தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திமுகவுக்கு பின்னடைவு என்பது அவர்களது பாரம்பரிய வாக்கு வங்கியை இழப்பதில் வரும். பாரம்பரிய வாக்கு வங்கியை பராமரிப்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமையாகும். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி என்பது பெண்கள் வாக்குகளாகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் இருந்துவந்த அந்த வாக்கு வங்கி இன்றைக்கு மிகவும் சரிந்துவிட்டது. அந்த வாக்கு வங்கியை கைப்பற்ற தற்போது முயற்சிப்பது யார் என்றால்? திமுக.
ஒரு காலத்தில் திமுகவுக்கு பெண்கள் வாக்கு வங்கி என்பது கிடையாது. ஆனால் இன்றைக்கு பெண்கள் வாக்கு வங்கி வருகிறது. எப்படி என்றால் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அப்போது பெண்கள் சார்ந்த புதிய வாக்கு வங்கியை உருவாக்குகிறார்கள். கடந்த 4 வருடங்களாக அந்த வாக்கு வங்கி உயர்ந்துகொண்டே வருகிறது. சாதகமான அம்சம் என்ன என்றால் ஆட்சி தொடர்ந்துகொண்டே வருவது. ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது என்றால், டிசம்பர் மாதம் வரை திட்டங்களை அறிவிக்கலாம். அப்போது வாக்கு வங்கியை எங்கே இழப்பதாக கருதுகிறார்களோ, அங்கே அதனை சரிசெய்வதற்கு திட்டங்களை அறிவிப்பார்கள்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை சார்பில் கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. பார்வைக்கு சாதாரணமான விஷயமாக தெரியும். உதயநிதியின் கீழ் அந்த துறை வருகிறது. கிரிக்கெட் பேட்டை வாங்கிக்கொண்டு வருகிற ஒரு கிராமத்து சிறுவனின் தாய், தந்தையின் வாக்குகளை பெற முடியும். பார்த்தால் கிரிக்கெட் பேட். நேரடி அரசியலுக்கு தொடர்பில்லாதது போன்று தோன்றலாம். ஆனால் அதில் வாக்குகளும் உள்ளது. இதை முன்பு மைக்ரோவா அரசியல்வாதிகள் கடைபிடித்தனர். தற்போது அதை மேக்ரோவாக மாற்றி விளையாட்டுத்துறை மூலம் வழங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் அது நினைவூட்டும். இந்த நினைவூட்டுதல்களை விட்டுக் கொண்டே செல்ல வேண்டும். இதையே கடவுள் சார்ந்த அரசியல் என்று எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் முருகன் படங்கள் இருக்கும். இவை பாஜகவுக்கு வாக்களிக்க நினைவூட்டுமா? பாஜக ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை. ஆனால் பாஜக வந்துவிட்டால் ஆபத்து என்கிற எதிர்மறை எண்ணத்தை உருவாக்கி, திமுக, விஜய், சீமான் போன்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று மக்களிடம் எண்ணம் தோன்றும்.
திமுக கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என்று சிபிஎம் கேட்கிறார்கள். கடந்த முறை குறைவான எண்ணிக்கையில் இடங்களை பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். கேட்பது அவர்களது உரிமை. கொடுக்கிறபோது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடக்கிறது. அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லிவிடுவார்கள். அதிமுகவால் அதிகபட்சம் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை கொடுக்க முடியும்? குறைந்தபட்சமாக 2001ல் ஜெயலலிதா கொடுத்தது 140+ இடங்கள்தான். எடப்பாடி பழனிசாமி, அதைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் வலியுறுத்தலாக மாறும். எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கும் இடங்களை தர வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதை தாண்டி பாஜகவுக்கோ, வேறு எந்த கட்சிக்கோ இடங்களை கொடுக்க முடியாது.
குறைந்தபட்சம் 160 இடங்கள் என்றாலும், மெகா கூட்டணி அமைக்க வேண்டும். அதில் பாமக இடம்பெற வேண்டும் என்றாலும் பாஜகவுக்கு கொடுக்கும் இடங்களுக்கு நிகரான இடங்களை பாமகவுக்கு தர வேண்டும். இது எப்படி சாத்தியமாகும். பாஜகவுக்கு குறைந்தபட்சம் 30 இடங்கள் கொடுத்தால், பாமகவுக்கு 30 இடங்கள் என 60 இடங்கள் அதிலேயே போய்விடும். மற்ற கட்சிகளுக்கு என்ன தருவார்கள். திமுக கூட்டணியிலும் இதற்கு சாத்தியமில்லை. சிபிஎம், விசிக கூடுதலான இடங்களை கேட்கின்றன. அப்படி இருக்கிறபோது திமுகவும் 160 இடங்களுக்கு மேலாக போட்டியிட வேண்டும். அப்போது அனைத்துக்கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுக்கக்கூடிய இடங்கள் 60க்குள்ளாக தான் வரும். அண்ணா காலத்திலேயே அப்படிதான் செய்தார்கள்.
60 இடங்களை பிரித்து தரலாம். சில தோற்ற உறுதிகளை வைத்துதான் கொடுப்பார்கள். பாஜக வந்தால் இந்த இந்த பிரச்சினைகள் எல்லாம் வரும். பாஜக வரக்கூடாது. அவர்கள் இரட்டை இலக்கத்தில் கூட வரக்கூடாது என்பது போன்ற அரசியல் உறுதிப்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு இடங்களை பிரிப்பார்கள். பாஜகவுக்கு அது நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அதிமுக உடன் கூட்டணி வைத்தார்கள் என்றால்? அதற்கான அரசியல் நிர்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு. ஒரு வருடம் கழித்து அவர் ஃபிரியாகி விடுவார். தேர்தல் நெருங்கிவிட்டால் அவருக்கு நிர்பந்தம் கிடையாது. அதிமுக கொடுக்கும் தொகுதிகளில் உடன்பாடு இல்லாவிட்டால், பாஜகவிடம் நண்பர்களாக சேருவாம். நண்பர்களாக பிரிவோம் என்ற வசனத்தை சொல்லிவிடுவார்கள். அது சிக்கலாகும்.
2021 சட்டமன்றத் தேர்தலே அப்படிதான் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தத்தளித்தது. ஒபிஎஸ் தலைமையிலான எம்.எல்.ஏ-க்களை, எடப்பாடியுடன் சேர்த்து வைத்தது பாஜக என்று தமிழகம் முழுவதும் தெரியும். ஆளுநரே இருவரது கரங்களையும் சேர்த்து வைத்தார். அதை சொல்லிதான் பாஜக 2019 தேர்தலில் அதிக இடங்களை கேட்டது. 2021ல் நாங்கள் கை காட்டுபவர்தான் முதலமைச்சர் என்று எல்.முருகன் சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கொடுத்த இடத்தில் தான் பாஜக வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தத்தில் மேஜர் பார்ட்னர், மைனர் பார்ட்னர் என்கிற சிஸ்டத்தில் செல்கிற கூட்டணி ஏற்பாடு. இதற்குள்ளாக தான் பங்கீடு என்கிறபோது என்ன செய்துவிட முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.