எடப்பாடி பழனிசாமி சொல்லும் மெகா கூட்டணி என்பது, கூட்டணியில் பாமக இடம்பெற்றால் மட்டுமே கொ கூட்டணியாக மாறும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மெகா கூட்டணி வியூகம் தொடர்பாக ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசிய அய்யாதன் கூறியதாவது:- அதிமுகவை பொருத்தவரைக்கும் வெற்றி பெறுவதற்கான வலிமையான கூட்டணி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் மட்டுமே நடந்துவிடாது என்று நம்பவில்லை. மெகா கூட்டணி என்கிறபோது இன்னும் நிறைய கட்சிகள் தேவை என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அது சரியானதும் கூட. பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரிய வெற்றி எல்லாம் பெறவில்லை. அதனால்தான் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொன்னார்கள். இப்போது கூட்டணிக்கு போகிறார்கள். அது எதற்காக என்பது தேவையற்றது. தேர்தலை பொறுத்தவரை 2 விதமான வியூகங்கள் உள்ளன. ஒன்று மக்களை மையப்படுத்திய வியூகம். மற்றொன்று ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிற வாக்கு பலம் அடிப்படையிலான வியூகம். தற்போது 2வது இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி வந்து நிற்கிறார். திமுகவை பொறுத்தவரை அந்த இடத்தை அவர்கள் முடித்துக் கொண்டார்கள். இதற்கு பிறகு சின்ன கட்சிகள் போய் சேரலாம். அதை தவிர வேறு யாருக்கும் இடம்பெற வாய்ப்பு இல்லை.
எடப்பாடி பழனிசாமியின் முதல் எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக்கழகம் தான். விஜய் வந்து விட்டாலே நாம் ஒரு 30 சதவீத வாக்கு வங்கிக்கு வந்துவிடுவோம் என்று எடப்பாடி நம்புகிறார். பாஜக கூட்டணி என்பது தற்போது ஏற்பட்டதுதான். விஜய்க்கு கொள்கை ரீதியாக ஒரு தடை உள்ளது. ஏனென்றால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லி விட்டார். தவெகவின் பல அறிக்கைகள் அதிமுகவின் அறிக்கைகளை ஒத்து இருப்பதை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அடிப்படையில் ஒரு கொள்கைத் தடை இருக்கிறது. ஆனால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. எப்படி ஒரு மெகா கூட்டணி அமைக்க எடப்பாடி முற்படுகிறார். அதேபோல், விஜய், பாமக மற்றும் சீமான் சேர்ந்து ஒரு கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. காரணம் என்ன என்றால்? வடதமிழ்நாட்டில் பலமான ஒரு சக்தியாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி, ஒரு மிகபெரிய பிரச்சார பலம் கொண்ட சீமான், மிகப்பெரிய ரசிகர் பலத்தை கொண்ட விஜய், இவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் மிகப்பெரிய பலம் பெற முடியும். ஏனென்றால் பெரியாரை திட்டிய பிறகும் சீமானுக்கு, விஜய் வாழ்த்து சொல்கிறார். அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். இதெல்லாம் கூட்டணிக் கதவுகளை திறந்துவைக்கும் செயலாகும்.
சீமானை பொருத்தவரை 2 திராவிட கட்சிகளுடன் சேர முடியாத கொள்கை நிலைப்பாடு எடுத்து செயல்பட்டு வருகிறார். விஜய் மாநாட்டிற்கு முன்னதாகவே அவர் விஜயுடன் இணக்கத்துடன் தான் இருந்தார். இதில் முக்கியமானது எது என்றால் பாமக எங்கே போய் சேரப்போகிறது என்பதுதான். இதுதான் மெகா கூட்டணியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். மெகா கூட்டணி வேண்டும் என்றால்? பாமக அதனுடைய அங்கமாக இருந்தால் தவிர அது மெகா கூட்டணியாக ஆகாது. வெற்றிக்கான சாத்தியக் கூறுகளும் இருக்காது. அதற்கான பொறுப்பு அய்யா ராமதாசிடம் உள்ளது. அவர் எப்படி பிளே பண்ண போகிறார் என்பதுதான் முக்கியமானது. அதிமுக என்பது பாமகவுக்கு ஒரு ஏதுவான கூட்டணியாகும்.
பாமகவை பொருத்தவரை அவர்களிடம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். அவர்களது இன்றைய தேவை என்பது, கணிசமான ஆட்கள் சட்டமன்றத்திற்குள் போக வேண்டும். அப்போது அரசியலில் தெளிவற்ற நிலை ஏற்பட்டால், மந்திரி சபையில் கூட இடம்பிடிக்கலாம் என்று நினைக்கிறார். எந்த கூட்டணியிலும் அடையாளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் அன்புமணியை பொறுப்பில் இருந்து விடுவித்தார். மக்களை மையப்படுத்திய வியூகத்தை அமைப்பதில் ராமதாஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இது தான் பெரிய பிரச்சினையாகும். அப்போது மெகா கூட்டணி என்பதற்கான பலம் எல்லாம் இன்னும் வெளியே தான் இருக்கிறது. அவர்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொருத்துதான் மெகா கூட்டணி அமையும்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அப்பாற்பட்டு நிற்கிற கட்சி எது என்றால்? பாமக, விசிக, நாதக கட்சிகள் தான். அவர்கள் எல்லாம் இயங்குவார்கள். எங்கே சென்றாலும் அவர்கள் இயங்குவார்கள். பாஜக என்பது ஊடங்களில்தான் இயங்கும். அதை தாண்டி செயல்படாது. பாமக, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து பார்த்தார்கள். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதே அவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் எப்படியும் 4 இடங்கள் வரை வென்றிருப்பார்கள். அதிமுக ஒரு பெரிய பலம் உள்ள கட்சியாகும். ஜெயலலிதா இறக்கும்போது 42 சதவீத வாக்குகள் இருந்தது. 2021ல் அது 33 சதவீதம் வாக்குகளாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அது 22 சதவீதம் என்றும் பெரிய சரிவை சந்திக்கிறது. அப்படி என்றால் அது ரொம்ப ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அதிமுகவை பலப்படுத்தும் வேலைகளை அவர்கள் செய்யவில்லை. அதனால் வெளியில் இருந்து பலத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் வெற்றியை பார்த்துதான் மற்றவர்கள் நாடி வருவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.