மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டி பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகஆவடி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம்,பட்டாபிராம்,திருநின்றவூர், முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது.இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது. குறிப்பாக ஆவடி பேருந்து பணிமனையில் இரண்டரை அடிக்கும் மேல் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.

இதனால், மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துடன் பேருந்தை இயக்கி வருகின்றனர்.தொடர்ந்து, இப்பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால் பேருந்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது . நீண்ட நேரம் ஆகியும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து வராததால் வீட்டிற்கு செல்ல காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக பெண்கள் முதியவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாததால் ஆவடி பேருந்து நிலையம் வெள்ள நிரில் தத்தளித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பகுதியில், மாநகரப் பேருந்து பணிமனைஅதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


