உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.
ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி மண்டல அலுவலகத்தில் இந்த மாதத்திற்க்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.இதில் ஆவடி,பட்டாபிராம்,திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம்,பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,புகைப்பட மாற்றம்,மொபைல் எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள நேரடியாக வருகை தந்தனர்.இவர்களில் சிலர் புதியதாக குடும்ப அட்டை விண்ணப்பிக்கவும் வருகை தந்திருந்தனர்.
ஆவடியை சேர்ந்த மைதிலி என்பவர் குடும்ப அட்டையில் தனது பேத்தி பெயரை எந்தவித முன் தகவல் இல்லாமலும் நீக்கி விட்டதாக கூறி தீர்வு காண 4 மாதங்களுக்கும் மேலாக அலைவதாக கூறி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து மைதிலி கூறுகையில் தான் கணவர்,மகளின் கணவர் உயிர் இழந்த பிறகு நான்,எனது மகள் பேத்தி என மூன்று பேர் மட்டும் பதிவு செய்திருந்த நிலையில் எந்தவித தகவலும் இல்லாமல் எங்களது குடும்ப அட்டையிலிருந்து பேத்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது.ரேஷனில் சர்க்கரையும் குறைக்கப்பட்டது.இதனை கேட்டபோதுதான் பெயர் நீக்கப்பட்டது தெரியவந்தது என கூறினார்.
ஆதாருடன் கைரேகை இணைக்க முதலில் குழந்தை பெயரை இணைக்கவேண்டும் என கூறி இ- சேவை மையத்தை அணுகினால்,மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கூறுகின்றனர். இப்படியே கடந்த 4 மாதங்களுக்கும் மேல் அலைகழிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.இதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
இதே போன்று புதியதாக பெயர் சேர்க்க வேண்டும்,பெயர் நீக்க வேண்டும்,புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க வேண்டும் என வருகை தரும் பொதுமக்களை பணியாளர்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்துகின்றனர்.இதுகுறித்து இளைஞர் ஒருவர் பணியாளர்களிடம் இ-சேவை மையத்தில் சென்று விண்ணப்பிப்பதற்கு எதற்கு முகாம்,வீணாக மக்களை ஏமாற்ற வேண்டாம் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்கையில் இங்கு பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் புதிய அட்டைகளுக்கு விண்ணப்பிப்பது கடினமாக உள்ளது.மேலும் ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஒரு விண்ணப்பத்திற்கு அரை மணி முதல் 1 மணி நேரம் வரை எடுப்பதாவும்,சில நேரங்களில் சர்வர் கோளாறு ஏற்பட்டு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் எங்களிடம் சண்டை இடுவதும், வாக்குவாதம் செய்வது நிகழ்கிறது. அரசு தளத்தின் வேகத்தை விட இ-சேவை மையங்களில் சர்வர் வேகமாக செயல்படுகிறது. இங்கு ஒரு விண்ணப்பம் நிறைவு செய்வதற்குள் அங்கு 3 விண்ணப்பம் வரை நிறைவு செய்யப்படுகிறது. எனவே தான் பொதுமக்களை இ- சேவை மையத்தினை நாட அறிவுறுத்துகிறோம் என விளக்கமளித்தார்.
மேலும் ஆவடி மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த தேவா என்பவர் தனது குடும்ப அட்டையிலிருந்து தம்பி பெயரை நீக்க வேண்டும் ,அவனுக்கு திருமணமாகி தனி குடும்பம் ஆகிவிட்டதால் எனது குடும்ப அட்டையிலிருந்து விடுவித்து புதிய அட்டை வழங்க வேண்டும் என விண்ணப்பிக்க வருகை தந்தார்.ஆனால் புதிய அட்டைக்கு தற்போது விண்ணப்பிக்க இயலாது என கூறியதால் ஆத்திரமடைந்த தேவா அங்கிருந்த பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில் தனது தம்பி அரசு பணியில் உள்ளார். மேலும் அவர் வருமான வரி கட்டி வருவதால் எனது மனைவிக்கு உரிமை தொகை விண்ணப்பித்து நிராகரிக்கபட்டது.எனவே தம்பிக்கு திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் பெயர் நீக்க வேண்டும் என கேட்டால் இப்பொழுது முடியாது என கூறுகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.மகளிர் உரிமை தொகை திட்டம் வந்ததிலிருந்து இந்த பிரச்சனை பலருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போல் நபர் ஒருவர் குடும்ப அட்டையில் தவறுதலாக யாரென்றே தெரியாத வேறு ஒரு நபரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால்,எந்தவித திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து பலமுறை அலைந்து திரிந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினார்.
இதுமட்டுமின்றி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.தற்போதுவரை அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனவும்,ஜனவரி மாத்திற்கு பிறகே இதற்கான அறிவிப்பு வந்தபின்னர் ஸ்மார்ட் அட்டை கிடைக்கப்பெரும் எனவும் பொதுமக்களுக்கு கூறப்படுகிறது.