ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில் கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் கால் வைத்ததும் உடைந்து தொங்கிய படிகட்டு…

குழந்தைகள் தான் நாட்டின் வருங்காலம், சாங்கியம் சம்பிரதாயத்துக்கெல்லாம் பேருந்து இயக்க கூடாது என கடுப்பான திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் .
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஆவடி வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆவடி, பூந்தமல்லி பகுதிகளுக்கு உட்பட்ட 65 தனியார் பள்ளிகளின் 395 வாகனங்கள் (வேன்,சிறிய வகை பேருந்து) சோதனைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த ஆய்வில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம்,பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அதிகாரி ஶ்ரீதர்,ஆய்வாளர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் உள்ளிட்டோர் ஒவ்வொரு வாகனமாக ஏறி சோதனை நடத்தினர். குறிப்பாக அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டி, பேருந்தை முன் பின் இயக்கம், திடீரென பிரேக் பிடித்தல் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது.
மற்றும் ஓட்டுநர் உதவியாளர்களுக்கு தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைப்பதன் உக்திகளை சொல்லிக் கொடுத்தனர். தொடர் வாகன சோதனையில் ஒரு சில பேருந்துகளில் அவசர காலத்தில் வெளியேற முடியாமல் இருக்கைகள் அமைக்கபட்டிருப்பதை கவனித்த அதிகாரிகள் அந்த இருக்கைகளை அகற்றும்படி அறிவுறுத்தி அந்த பேருந்துகளை ரத்து செய்தனர்.
இதனை தொடர்ந்து பிரபல தனியார் பள்ளியான ஸ்பார்டன் பள்ளியின் வேன் படியில் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் ஏறி கால் வைத்து சோதனை செய்ய முயன்றபோது படி உடைந்து தொங்கியது. இதனால் அந்த வாகனத்தை நிராகரித்து அனைத்து வாகனங்களின் படிக்கட்டுகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
மேலும் குழந்தைகள் ஏறுவதற்கு இலகுவாக இருக்கும் படி அளவு உள்ளதா என டேப் வைத்து அளவிட்டு அதிரடி சோதனை நடத்தினார்.உயரம் அதிகமாக இருந்த வாகனத்தையும் நிராகரித்து சீர் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். தற்போதுவரை 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 35-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.