சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார் – சோனியா தம்பதி. இவர்களது 4 வயது மகன் ரக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவன் ரக்சனை அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிறுவன் ரக்ஷன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் மதுரவாயல் பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர் கேடு நிலவதாகவும், இதன் காரணமாகவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சிறுவனுக்கான இறுதிச் சடங்குகள் செய்யப்படாது என உறவினர்கள் தெரிவித்துள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.