ஈபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும்! மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்.
இதனை முன்னிட்டு அவரது சொந்த ஊரான எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் முருகன் தலைமையில் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கி பெண்களுக்கு தென்னங்கன்று, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வேண்டி தொண்டர்கள் மண் சோறு உண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.