சென்னை அடையாறு தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூபாய் 10.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையம் கட்டடம், 9.62 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னா் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இதை நேஷனல் ஹெல்த் மிஷன் அவர்கள் தான் வேலைக்கு எடுப்பார்கள். இதில் 60% மத்திய அரசு நிதி 40 சதவீதம் மாநில அரசின் நிதி பங்களிப்போடு அவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு சீரிய திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

அந்தத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட பணியிடங்கள் முழுமையாக தற்காலிகம் என்று தான் சொல்லி எடுக்கப்பட்டது. இதில் யாரோ ஒரு இடைத்தரகர் நீங்கள் சென்னைக்கு வந்தால் உங்களை பணி நிரந்தரம் செய்கிறோம் என்று சொல்லி தவறான வழிகாட்டுதலை செய்து நேற்றைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்றார். அந்த சங்கத்தின் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் மற்ற கோரிக்கைகள் அரசின் சார்பில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேர்தல் நெருங்கும் என்பதால் இடைத்தரகர்கள் பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது என்று கூறினார்.
டெங்கு இறப்பு விகிதம் குறைந்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் குறைவற்கு காரணம் பொது சுகாதார துறையின் சார்பில் எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பும் மிகப்பெரிய காரணம் என்றார். கடந்த ஆட்சி காலத்தில் இந்த டெங்கு பாதிப்பு வரும் பொழுது தனியார் மருத்துவமனையில் இருக்கக்கூடிய பாதிப்பை வெளியே தெரிவிக்காமல் அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய பாதிப்பு மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு டெங்கு மாதிரியான இந்த பாதிப்புகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்த பாதிப்பையும் செய்தி குறிப்பாக வெளியிட்டு இருக்கிறோம்.
இறப்புகள் என்று எடுத்துக் கொண்டால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே 2012 ஆம் ஆண்டு 66 நபர்கள் உயிரிழந்தார்கள். 2017 இல் 65 நபர்கள் உயிரிழந்தார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒற்றை இலக்கு விகிதத்தில் உயிர் இழப்புகள் குறைந்து இருக்கிறது .அந்த உயிரிழப்புகளின் காரணம் கூட டெங்கு பாதிப்பு வந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வராமல் தாங்களாகவே தன்னிச்சையாக சிகிச்சை பெற்றுக் கொள்வது தான் என்றும் இதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அந்த விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றியாகவும் பொது சுகாதார துறையின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவும் தான் டெங்கு பாதிப்புகளை எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் அனைவரும் உணர்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது தான் போதைப் பொருட்களான குட்கா பான் மசாலா போன்ற பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதை தடுக்க சட்டமன்றத்தில் இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது தெரிவித்த போது எடப்பாடி பழனிச்சாமி எதுவும் இல்லை கூறினார். அடுத்த நாளே 21 சட்டமன்ற உறுப்பினர்கள் பான்பராக் குட்கா எல்லாம் எடுத்துக்கொண்டு சட்டமன்றத்தில் காட்டினார்கள்.
அப்பொழுது உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்கிற முதலமைச்சராக இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்லி இருக்க வேண்டும் என்றால்; இது எங்கே கிடைத்தது காட்டுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அந்த 21 நபர்களின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை எடுங்கள் என்று சபாநாயகருக்கு சொல்லி அதற்கான நடவடிக்கையை ஈடுபட்டார்கள்.
அவர்கள் போதைப் பொருட்களை பற்றி பேசுவது தான் விந்தையாக இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தி போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக ஆக்கி இருக்கிறோம்.
கஞ்சா அறுவடை ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத நிலை இருக்கிறது. குற்றச்சாட்டு சொல்லுகிற எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்கேயாவது விற்கப்படுவது என்று தகவல் சொன்னார்கள் என்றால் அரசு நிச்சயமாக அவர்களுடைய பெயர்களை மறைத்து ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஒவ்வொரு வருடமும் கல்லூரி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் விழிப்புணர்வு எற்படுத்தி கின்னஸ் சாதனையாகவே வருடம் வருடம் செய்து வருகிறோம். அதனால் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதை மறைத்துவிட்டு இந்த ஆட்சியில் ஏதோ போதை வளர்ந்திருக்கிறது என்பதான குற்றச்சாட்டுகள் என்பது உண்மையற்றது“ என்று கூறினாா்.


