சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய விசாரணைக்காக சீமான் வரும்போது தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். மேலும் 7 முறை தன்னை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் சீமான் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த 12-ஆம் தேதி அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரானார்.இதன் பின்னர், இன்று ஆஜராக வேண்டும் என 2-வது முறையாக சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றார்.புகாரை திரும்ப பெற்றதற்கான ஆவணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
விஜயலட்சுமி அளித்த புகார் மனு இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று சீமான் ஆஜரானார். அப்போது 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.